பேரவை நடவடிக்கையில் இனி ஈடுபட மாட்டேன்: ஜெ.தீபா கணவர் மாதவன் பேட்டி

260 0

நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன். எனக்கும், பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஜெ.தீபா கணவர் மாதவன் கூறினார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் நேற்று கூறியதாவது:-

கடந்த 3 மாதமாக நான் ஜெ.தீபாவுடன் இருந்து தொண்டர்களின் விருப்பப்படி செயல்பட்டேன். இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுத்துவந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெ.தீபா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது, பேரவையை தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது எதுவுமே எனக்கு தெரியாது. இவை அனைத்துமே தீபாவின் தனிப்பட்ட செயல்பாடுகள்.

ஆனால் பேரவை தொடங்கியபோது தீபாவுக்காகவே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பொறுப்பாளர்கள் பட்டியலில் ஒருவரை கூட எனக்கு தெரியாது. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். அவர் தனித்து செயல்பட்டாலும், சிறப்பாக செயல்படுகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன். எனக்கும், பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தீபா நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.