அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்குவதில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அம்மா உணவகம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை. ஒரு இடத்தில் கூட அம்மா உணவகம் மூடப்படவில்லை. முதல்வரும் மூடச் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்குவதில்லை. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “வேண்டும் என்றே திட்டமிட்டு இதுபோன்ற செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செய்திகளுக்கு வக்காலத்து வாங்கி எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை தவிர்க்க வேண்டும். எந்த இடத்தில் என்பதை தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

