பேருந்துகளில் மாணவர்களை ஏற்றாமல் சென்றமை தொடர்பில் இ.போ.ச நடவடிக்கை

156 0

திர்வரும் காலங்களில் முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து சம்பந்தப்பட்ட பேருந்து குழுவுக்கு எதிராக சபை விதிமுறைகளின்படி, கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் (வடக்கு) பிராந்திய முகாமையாளரால் (செயலாற்றல்) மாகாணத்தில் இயங்கும் முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்றமை தொடர்பாக த.கனகராஜ் நேற்று (29) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‍அவர் மேலும் கூறியிருப்பதாவது,

‘பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்’ என்னும் தலைப்பில் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தது.

அதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் (செயலாற்றல்) அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா சாலை முகாமையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிரதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் பிரகாரம், கடந்த 2022.11.14 மற்றும் 2022.09.19 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய சாலைகளின் முகாமையாளர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தும், அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பாடசாலை ஆரம்பம் மற்றும் முடிவு நேரங்களில் செயலாற்றும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களை பேருந்துகளில் ஏற்றி இறக்குமாறு பேருந்து குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து சம்பந்தப்பட்ட பேருந்து குழுவுக்கு எதிராக சபை விதிமுறைகளின்படி, கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இலங்கை போக்குவரத்து சபையின் (வடக்கு) பிராந்திய முகாமையாளரால் (செயலாற்றல்) மாகாணத்தில் இயங்கும் முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.