கிளாம்பாக்கத்துக்கு 642 நடை பேருந்து இயக்கம்: மாநகர போக்குவரத்து கழகம் திட்டம்

55 0

சென்னை மற்றும் புறநகரிலிருந்து நாளொன்றுக்கு 60 பேருந்துகளை 642 நடை அளவுக்கு இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டிலிருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குப் பொதுமக்கள் எளிதாகச் செல்ல வசதியாக மாநகரப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி வண்டலூர், தாம்பரம் செல்லும் பேருந்துகளை நீட்டிக்கவும், புதிதாக சில வழித்தடங்களில் சேவைகளை தொடங்கவும் மாநகர போக்கு வரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது வரை 60 பேருந்துகளை 642 நடைகள் கிளாம்பாக்கத்துக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவடி,கோயம்பேடு, மாதவரம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து 12 பேருந்துகள் புதிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “தற்போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்தை அடையும் வகையில் 642 நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1,000 நடைகள் இயக்குமாறு அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளன” என்றனர்.