“காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனம்” – பல்வீர் சிங் குறித்து வைகோ ஆவேசம்

59 0

காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட சேரன்மாதேவி காவல் அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ். தமது காவல் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கிடைத்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவை காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்களாகும். பெருமைக்குரிய இந்திய காவல் பணி நிலையில் உள்ள ஓர் அலுவலரின் இச்செயல்கள் கடுமையான குற்றச் செயல்களாகும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அலுவலரை காத்திருப்போர் பட்டிலில் வைத்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி வழிகாட்டுதலில் முழுமையான அர்ப்பணிப்புடன் மக்கள் போற்றும் வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல் துறையின் பெருமைக்கு இப்படிப்பட்டவர்களால் களங்கம் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டோரிடம் புகார்கள் பெற்று, இவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 29) தெரிவித்தார். அதன் விவரம்: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் | அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி சஸ்பெண்ட்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்