காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி; உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்….. (காணொளி)

267 0

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டஇந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார்களா? எதற்காக கொலை செய்தீர்கள்? இந்த கேள்விகளுக்கு அரசாங்கமும், படையினரும் தமக்கு பதில் சொல்லவேண்டும் எனவும் அந்த பதிலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் கோரி பன்னிரண்டாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலை பெற்று கொடுக்காவிட்டால் தங்களுடைய சாவுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களும் படையினரும் மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமும் பொறுப்பேற்கவேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.