60-வது மலர் கண்காட்சிக்காக கொடைக்கானலில் தயாராகும் பிரையன்ட் பூங்கா

83 0

கொடைக்கானலில் மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் ஒரு லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கொடைக்கானலில் மே மாதம் கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில் பிரையன்ட் பூங்காவில் கடந்த நவம்பர் முதல் மலர்ச் செடிகளை நடவு செய்யும் பணியை தொடங்கினர்.

சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா மற்றும் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் உட்பட தற்போது வரை ஒரு லட்சம் மலர்ச் செடிகளை நடவு செய்துள்ளனர்.

பனியின் தாக்கத்தில் மலர்ச் செடிகள் பாதிக்காமல் இருக்க மாலைமுதல் மறுநாள் காலை வரைநிழல் வலைகளை போர்த்தி பாதுகாப்பாக பராமரித்து வருகின்றனர். கோடை விழா மலர் கண்காட்சி மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் பூங்காவைதோட்டக்கலைத் துறையினர் தயார் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறும்போது, “தற்போது நடவு செய்யப்பட்டுள்ள மலர்ச் செடிகள் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியின் போதுபல வண்ணங்களில் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்” என்றார்.