இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் மூவர் வைத்தியசாலையில்

245 0

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் மூவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஈழதமிழர்கள் ஐந்தாவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் சிலர் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.

இவ்வாறு புகலிடம் கோரிய 350 ஈழத்தமிழர்கள் குடும்பங்களாகவும், தனி நபர்களாகவும் இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் அவர்களின் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் கொலைசெய்யப்படலாம் அல்லது காணமல் ஆக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

இதனால் தம்மை திருப்பி அனுப்பவேண்டாம் எனவும் அகதி அந்தஸ்து வழங்கி வேறு நாடுகளில் தம்மை மீள்குடியேற்றுமாறும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழ அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் உலகத் தமிழர்கள் அனைவரும் எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுதருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.