அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கி வீடு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு சேதம்

193 0

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இம்மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று (28) அதிகாலை வேளையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையுடனான காலநிலை நிலவியது.

இச்சந்தர்ப்பத்தில் நிலவிய மின்னல் தாக்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள சில வீடுகளில் பலத்த தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் நிகழ்ந்த மின்னல் தாக்கத்தினால் அக்கரைப்பற்று ஆறாம் பிரிவு மத்திய கல்லூரி வீதியில் உள்ள சில வீடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தென்னை மரமொன்றினை தாக்கிய மின்னல் காரணமாக தென்னை மரத்தில் தீப்பிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து மரத்தின் கீழிருந்த வீட்டினையும் இம்மின்னல் தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

பாரிய இடி மின்னல் ஏற்பட்ட வேளையில், தென்னை மரத்தின் கீழிருந்த படுக்கை அறையினை மின்னல் பலமாக தாக்கியதாகவும் அதன் மூலம் தான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் குடும்பத்தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பலத்த சத்தத்துடன் தீப்பிளம்பு போல் ஒளி வீட்டுக் கூரையினை உடைத்துக் கொண்டு வீட்டினுள் ஊடுருவி மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் தாம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது கூரையின் பாகங்கள் தான் படுத்துறங்கிய கட்டிலில் பலமாக வீழ்ந்ததாகவும் அதன் மூலம் சிறு காயங்களுடன் தான் உயிர் தப்பியதாகவும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

சில மக்கள் குடியிருப்பு மனைகளில் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதுடன், மின்வயர்கள் பொருத்தப்பட்டிருந்த வீட்டின் சுவர்ப் பகுதிகள் உடைந்து சிதறியதாகவும் சில தளபாடங்கள் சேதமடைந்துள்ளதாகவும்  குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.  தம் பார்வையினைப் பறிக்கும் வகையில் மிகப் பிரகாசமான நீல நிற மின்னல் கீற்றுக்கள் உள்நுழைந்துள்ளதால் தாம் மிகுந்த அச்சத்திற்குள்ளானதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.