கைவிடப்பட்ட நிலையிலுள்ள தொழிற்சாலை: களுத்துறை சம்பவத்துடன் தொடர்பா?

445 0

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலை ஒன்று குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

ஹொரண – மொரகஹஹேன பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட வேன் தொடர்பில், மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸாரால் மீட்கப்பட்ட வேன், கடந்த ஜனவரி 16ம் திகதி மருதானையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாடகை நிமித்தம் சென்ற வேளை, சாரதிக்கு குடிபானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து கொள்ளையிடப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு வாகனங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.