யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று அடையாளம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மலசலக்கழிவு மற்றும் ஏனைய கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக் கடலினுள் செலுத்தப்படுகின்றது. இது கடந்த 20 வருடமாக நடைபெற்று வருகின்ற ஒரு செயல்முறையாகும்.
ஆனால் தொழிநுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடங்கல் நிலை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்த வேலைகளில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன.
குறிப்பாக பண்ணை பகுதியில் இந்த நீரை அனுப்பும் இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இருந்தோம்.
வைத்தியசாலையில் உணவு தேவைக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்கு இரண்டு வகையான நீரை பயன்படுத்துகின்றோம்.
வைத்தியசாலையில் மூன்று கிணறுகளில் இருந்து இறைக்கப்படும் நீர் வைத்தியசாலை பொது தேவைக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக நீருக்கு கட்டாயமாக குளோரின் இட்டு அதனை பாவித்து வந்தோம்.
ஆனால் இந்த கழிவுநீர் வெளியேற்றம் திருத்த வேலைகள் காரணமாக தடைப்பட்டிருந்த போது சடுதியாக நில மட்டத்தில் கழிவுநீரின் தன்மை அதிகரித்ததினால் கிணற்றில் அதிகளவு கழிவுநீர் உள்ள கிருமிகள் சென்றதன் வெளிப்பாடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் சத்திர சிகிச்சை கூட உத்தியோகத்தர்கள் விடுதியில் கடமையாற்றுகிறவர்கள் வயிற்றோட்ட நோயால் பாதிக்கப்பட்டார்கள்.
இது எமக்கு உடனடியாக தெரியவந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடனடியாகவே அந்த கிணற்று நீரினை பரிசோதனைக்காக அனுப்பினோம்.
அதுபோல மேலதிக குளோரின் இட்டு கிருமி தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது ஆய்வு கூடத்தில் ஒருவகை பக்டீரியா காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகையான குளோரின் ஊட்டத்தின் மூலம் இந்த கிருமிகள் அழிக்கப்பட்டன. தற்போது கிருமித் தொற்று நிலமை சுமுகமாக உள்ளது.
இது ஒரு தற்காலிகமாக ஒரு ஏற்பட்ட பிரச்சனையே தவிர திட்டமிடப்பட்ட விடயம் அல்ல இந்த விடயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை தற்பொழுது அந்த குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு அது தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

