மங்கள சமரவீர – ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்திப்பு

226 0

ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்தித்துப் பேச்சு நடாத்தினார்.

கடந்த ஜனவரி முதலாம் நாள் புதிய ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குட்ரெசை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் பலப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள ஐநா பொதுச் செயலர், மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்காவுக்கு உதவ ஐநா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராகக் கடமையாற்றியபோது, 1978ஆம் ஆண்டிலிருந்து சிறீலங்காவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும், சிறீலங்கா தனது இதயத்தில் இடம்பிடித்த நாடு எனவும் ஐநா பொதுச் செயலர் அன்ரனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.