அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி: டிரம்ப் தேர்வு செய்த பிலிப் பில்டன் விலகல்

222 0

கடற்படை செயலாளர் பதவிக்கு பிலிப் பில்டனை முறையாக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவர் அந்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் பல்வேறு நிர்வாக பதவிகளுக்கு புதிய நபர்களை நியமித்து வருகிறார். அதன்படி கடற்படையின் புதிய செயலாளராக, அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரிகளும், தனியார் பங்கு நிர்வாகியுமான பிலிப் பில்டன் என்பவரை அவர் தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து கடற்படை செயலாளர் பதவிக்கு பிலிப் பில்டனை முறையாக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவர் அந்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்து உள்ளார். அரசின் முரண்பட்ட சட்ட விதி முறைகளை காரணம் காட்டி அவர் விலகியதாக தெரிகிறது.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடற்படை செயலாளர் பதவியை ஏற்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ததில், தேவையற்ற இடையூறுகள் இன்றியும், எனது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார நலன்களை சார்ந்தும் அரசின் நெறிமுறைத்தேவையை திருப்திபடுத்த என்னால் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக ராணுவ செயலாளர் பதவிக்கு டிரம்ப் தேர்வு செய்திருந்த வின்சென்ட் வயோலா என்பவரும் விலகியது குறிப்பிடத்தக்கது.