காசிவிஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.13 கோடி மனைகள் மீட்பு

69 0

சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள காசிவிஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான மனைகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக ஏரிக்கரை சாலையில் 10,486 சதுர அடி, சர்தார்படேல் தெருவில் 4,054 சதுர அடி, ஈஸ்வரன் கோயில் தெருவில் 262 சதுர அடி என மொத்தம் 14,802 சதுர அடி (6 கிரவுண்ட், 402 சதுர அடி) பரப்பளவுள்ள மனைகள் 18 பேருக்கு வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

அவர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் அனுபவித்து வந்தனர். இதனால் துறையின் இணை ஆணையர் உத்தரவுப்படி, காவல் துறை, வருவாய்த் துறை உதவியுடன் நேற்று அம்மனைகளில் உள்ள கடைகள், சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம்.பாஸ்கரனால் பூட்டி சீலிடப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.13 கோடியாகும். மீட்புப் பணிகளின்போது கோயில் செயல் அலுவலர் சோழமாதேவி, ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.