பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் சாதாரண மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம்

67 0

ரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வருமான வரிக்கு அரச ஊழியர்களில் 5 வீதமானவர்களே அடங்குகின்ற நிலையில் இந்த வரிவிதிப்புக்கு சம்பந்தப்படாத 95 வீதமான அரச ஊழியர்களை இணைத்துக்கொண்டு பணிப்பகிஷ்கரிப்புக்கு நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் மோசமான செயலாகும்.

அதனால் அதிக வருமானம் பெறுபவர்களிடம் இருந்து பெறப்படும் வரி நிறுத்தப்பட்டால், சாதாரண மக்களே அதனால் பாதிக்கப்படுவர் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

வரி இல்லாமல் எந்தவொரு நாடும் அபிவிருத்தியடைய முடியாது. அதனால் வரிக்கொள்கை நாட்டுக்கு முக்கியமானதாகும். எமது நாட்டில் நேரடி வரி 18 வீதமும் மறைமுக வரி 82 வீதமும் தற்போது பெறப்படுகிறது.

மறைமுக வரி அதிகரிப்பதன் மூலம் வசதி படைத்தவர்கள், சாதாரண மக்கள் என அனைவரும் அதற்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஆனால், நேரடி வரி வசதி படைத்தவர்களிடமிருந்தே அறவிடப்படுகிறது.

அதன் பிரகாரமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வருமான வரியை 30 வீதம் வரை அறவிட நடவடிக்கை எடுத்திருந்தார். 30 வீதம் எனும்போது அரச ஊழியர்களில் 3 இலட்சம் சம்பளம் பெறுபவர்கள் மாத்திரமே செலுத்தவேண்டி வருகிறது.

இந்தளவு சம்பளம் பெறுபவர்கள் இலங்கை மின்சார சபையில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகும். இது அரச ஊழியர்களில் 5 வீதமானவர்கள் ஆவர்.

அதேநேரம் வருமான வரி அறவிடப்படுவது ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு அதிக சம்பளம் பெறுபவர்களிடமாகும். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளம் பெறும் ஒருவர் மாதத்துக்கு ஆயிரத்து 500 ரூபாவை வரியாக செலுத்தவேண்டி ஏற்படுகிறது.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுபவர் 4 ஆயிரத்து 500 ரூபா வரியாக செலுத்த வேண்டி ஏற்படுகிறது.

2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவர்கள் 9500 ரூபா வரி செலுத்தவேண்டி ஏற்படுகிறது.

அரச ஊழியர்கள் 5 வீதமானவர்கள் மாத்திரமே ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுபவர்களாக இருக்கும் நிலையில் இந்த வரியை இல்லாமலாக்கிக்கொள்ள ஒரு இலட்சத்துக்கும் குறைவாக சம்பளம் பெறும் 95 வீதமான அரச ஊழியர்களையும் இதில் இணைத்துக்கொண்டு வீதிக்கிறக்கி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

அத்துடன் வருமான வரி அறவிடுவது 2019 வரைக்கும் இருந்து வந்தது. அதன் பின்னரே இந்த வரியை 2 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர்களுக்கு என விதிக்கப்பட்டதுடன் வரியையும் குறைத்திருந்தது. அதனால் நாட்டுக்கு வருமானம் குறைவடைந்து நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்த வரி அத்தியாவசியமாகும். அதிக வருமானம் பெறுபவர்களிடம் இருந்து பெறப்படும் இந்த வரிப் பணத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம்  மறைமுக வரி குறைக்கப்பட்டு எதிர்காலத்தில் பொருட்களின் விலை குறைவடையவும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் வருமான வரி விதிப்பு தொடர்பாக அரச ஊழியர்களை பிழையாக வழிநடத்தி அதிக வருமானம் பெறுபவர்கள், அவர்களை வீதிக்கிறக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இவர்களின் இந்த சூழ்ச்சிக்கு சாதாரண அரச ஊழியர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றார்.