தமது பிள்ளைகளை ராணுவமே பிடித்துச் சென்றதென தெரிவிக்கும் தாய்மார், அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கதறியழுகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை கண்டுபிடித்துத் தருமாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம், எட்டாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள வயோதிப தாய் ஒருவர் கூறுகையில், தனது மகளின் மகனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது தன் மருமகனை பிடித்துச் சென்றதாகவும் தற்போது தன் பேரனுக்கு 13 வயதாகியும் தனது மகள் இதுவரை விதவையாகவே வாழ்கின்றார் எனவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
தமக்கு வேறு எந்த உதவிகளும் வேண்டாம் என்றும் தமது பிள்ளைகளுக்காகவே தாம் கஷ்டப்படுவதாகவும் பிறிதொரு தாய் தெரிவித்தார்.
இதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.