ஏவுகணையை வைத்து புதின் என்னை மிரட்டினார்: போரிஸ் ஜான்சன்

61 0

ஏவுகணைகளை வைத்து புதின் தன்னை மிரட்டுவதாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன்னர், ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன் பிபிசி நிறுவனத்திற்கு சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருக்கிறார்.அதில் புதின் குறித்து அவர் கூறிய தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பேட்டியில் போரிஸ் ஜான்சன், “உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும், நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே புதினுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காக உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோவில் சேராது என்றும் நான் புதினிடம் கூறினேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் புதின் என்னை மிரட்ட ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து அவர் பேசும்போது, “போரிஸ் ஜான்சன், நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால்,ஏவுகணை மூலம்,அது ஒரு நிமிடம் நிகழலாம்” என்றார். அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை தொனியிலிருந்து புதின் விலகியது அவரது பேச்சில் தெரிய வந்தது” என்று தெரிவித்தார்.

உக்ரைன் – ரஷ்யா போர் : அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.