மின் துண்டிப்பு விவகாரத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக, இணக்கப்பாட்டை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அரச வங்கிகள் என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாக கடந்த புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தது.
எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பின் பின்னரும் வழமை போன்று மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே 1996 இல 21 மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய , மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை செயற்படுத்த தவறியமை மற்றும் ஆணைக்குழுவிற்கு பதிலளித்தலை உதாசீனப்படுத்தியமை என்பன ஆணைக்குழுவை அவமதிக்கும் குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டீ.யு.கே.மாபா பதிரண மற்றும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எஸ்.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எனினும் உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தடையற்ற மின் விநியோகத்திற்கான எரிபொருளை வழங்குவதற்கு , தமது அதிகாரிகளின் நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளாது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கையெழுத்தினைப் பெற்றுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் செயலாளர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஆணைக்குழுக்கள் , நிறுவனங்களுக்கிடையிலான வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில் வழமையான மின் துண்டிப்பின் காரணமாக பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மின் துண்டிப்பினால் முதல் நாள் இரவு பரீட்சைக்கு தயாராவதில் தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் , விரைவில் இதற்கான தீர்வினை உரிய தரப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையிலேயே பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் , ‘பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி எரிபொருளை வழங்க முடியாது என்றும் , மனித உரிமைகள் ஆணைக்குழு தன்னிச்சையாக இதற்கு இணப்பாட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கலந்துரையாடல்களில் பங்குபற்றிய தமது அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

