ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகியமை தேர்தலை நிறுத்துவதற்கான சதித்திட்டம்

279 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதன் உறுப்பினரொருவர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை பொறுத்தமற்றது. ஏதேனுமொரு வகையில் தேர்தலை நிறுத்துவதற்கான சதித்திட்டமாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம் என்று பெப்ரல் அமைப்பின் தலைவர் றோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஏதேனுமொரு வகையில் நிறுத்துவதற்கான சதித்திட்டமாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். இது பொறுப்பற்றவொரு செயற்பாடாகும். எனவே இது போன்ற பதவி விலகல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. எவ்வாறிருப்பினும் இந்த பதவி விலகலானது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தாது. அரசியலமைப்பின் 104 ஆவது உறுப்புரையில் இது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பதவி வெற்றிடங்கள் ஏற்படுகின்றன என்பதற்காக ஆணைக்குழு எடுத்த தீர்மானங்கள் செல்லுபடியற்றதாகாது. தேர்தல் ஆணைக்குழு என்பது நாட்டில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகும். அவ்வாறிருக்கையில் தேர்தலொன்றுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பதவி விலகுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல.

அரசியலமைப்பு பேரவை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டால் தேர்தல் தொடர்பில் நம்பிக்கையற்ற ஒரு நிலைமையை அது ஏற்படுத்தும். எவ்வாறிருப்பினும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , அதுவும் தேர்தலில் தாக்கத்தை செலுத்தாது என்றார்.