16 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்ற பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம்

212 0

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இன்று (ஜன.27) காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

முருக்கப்பெருமானின் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள மலைக்கோயிலில் முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருந்து மக்களுக்கு காட்சியளிக்கிறார். ஞானப்பழம் குறித்து எழுந்த சர்ச்சையில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு முருகக் கடவுள் வந்து குடியேறிய இடம் என சிறப்பு பெற்றது பழநி மலை.

பழநி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு (2006) கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்ற நிலையில் பல முறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சித்தும் 2018 ம் ஆண்டு நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தநிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறத்துவங்கி கடந்தவாரம் முடிவுற்றது. இதையடுத்து இன்று(ஜன., 27) கும்பாபிஷேகம் நடைபெற்றது.