யாழ் மாநகரசபை பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்கள் 20 பேரிற்கு 540,000 ரூபா தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக ஒவ்வொரு மாதமும் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 11ம், 12ம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17ம், 18ம் திகதிகளிலும் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான உணவுப் பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத உணவு பொருட்கள் மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் என ஏராளமான மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்நகர், நல்லூர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்த பொது சுகாதார பரிசோதகர்கள் 20 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வழக்குகள் இன்றையதினம் மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கடை உரிமையாளர்கள் அனைவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 540,000 ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.

