தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமானது அதற்குரிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கூட்டிணைவு, இச்சட்டம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறது.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மீதான நன்கொடையாளர்களின் அல்லது நிதியளிப்பவர்களின் தேவையற்ற செல்வாக்கை தடுத்தல், தேர்தல் களத்தில் புதிதாக நுழைந்தவர்கள் மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான கள வாய்ப்பினை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுநிதியினை தவறாக பயன்படுத்தல், வாக்கினை வாங்குதல் போன்ற தேர்தல்களுக்கு அதிகப்படியான, சட்டவிரோதமான செலவுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல் போன்ற தேர்தல் பிரசார நிதியளிப்பை ஒழுங்குபடுத்தும் சட்டமொன்றை இயற்ற வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
எவ்வாறிருப்பினும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் மசோதா’ குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இனங்காணப்படவில்லை.
இந்த மசோதாவானது வெளிநாட்டு அரசாங்கங்கள், இலங்கைக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்கள், வெளிநாட்டுப் பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அநாமதேய நன்கொடையாளர்கள் போன்ற தரப்பினரின் தேர்தல் பிரசாரப் பங்களிப்புகளை கட்டுப்படுத்துகிறது.
எனினும், ஒரு வேட்பாளர், கட்சி அல்லது சுயேட்சைக்குழு எந்த மூலங்கள் அல்லது வழிமுறைகளின் ஊடாக எவ்வாறு நிதியைப் பெறமுடியும் என்பதற்கு இதில் எந்த வரையறையும் விதிக்கப்படவில்லை. ஆகவே, இது தேவையற்ற செல்வாக்கினை செலுத்த இடமளிக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தொகை குறித்து இந்த மசோதா முன்னறிவிக்கிறது. இருப்பினும், குறித்த தொகையானது போதியளவான தகவல்களுடன் பரிசீலிக்கப்படவில்லை.
மேலும், இது போதுமான கண்காணிப்பு பொறிமுறையினை கட்டமைக்கவில்லை. வேட்பாளர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகளை இம்மசோதா கட்டுப்படுத்துவதில்லை. ஆகவே, குறித்த முன்மொழியப்பட்ட செலவு வரையறைகளானது இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கத்தையே புறந்தள்ளும்.
செலவின் வரையறைகளை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நடைமுறையும் போதுமானதாக அல்லது வலுவானதாக அமையவில்லை. வேட்பாளர்கள் கணக்காய்வுத் தணிக்கை செய்யப்பட்ட விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மட்டுமே இம்மசோதா வலியுறுத்துகிறது.
வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் என அனைவரினது கணக்கு விபரங்களையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் வெளிப்படுத்தல் மற்றும் அதனை பராமரித்தல், குறித்த விபரங்களை டிஜிட்டல் வடிவில் (இணைய வழியில்) பொதுமக்களால் அணுகக்கூடியதாக இருத்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது ஒரு வினைத்திறனான சட்டத்தின் தேவைப்பாடுகளாகும். இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துவதற்கு குறித்த சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

