தொழில்நுட்ப, தந்திரோபாய ரீதியாக தகுதியான இராணுவப் பலத்தை உருவாக்குவதே எமது நோக்கம்

130 0

இலங்கையின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணையாக எந்தவொரு பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் தகுதியான சமநிலையான இராணுவப் பலத்தை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவ செலவீனங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

இராணுவத்தின் பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றன. அவை ஒன்றாக இருந்த போதிலும் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக தென்படுவதில்லை.

இராணுவச் செலவினம் என்பது தேசிய மற்றும் மனிதப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை ஏற்படுத்தும் மறைமுகமாகத் தூண்டப்படும் ஒரு அரச செலவினமாகும்.

இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் தற்போது 200 783 ஆக இருந்தாலும், 2024 ஆம் ஆண்டளவில் அதனை 135 000 ஆகக் குறைத்து , பின்னர் 2030 ஆம் ஆண்டளவில் அதனை 100 000 ஆகக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு இணையாக எந்தவொரு பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் தகுதியான சமநிலையான இராணுவப் பலத்தை உருவாக்குவதே இந்த மூலோபாயத் திட்டத்தின் நோக்கமாகும்.