வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும்….(காணொளி)

230 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது.

இரவு பகலாக வீதிகளில் சமைத்து உண்டு தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்;டதாரிகள் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.

மத்திய, மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பட்டம்பெற்ற 4 ஆயிரத்தி 500 ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் இருப்பதாகவும், ஆனால் அவர்களுக்கான எந்த தீர்வினையும் வழங்குவதற்கான நடவடிக்கையினை மத்திய மாகாண அரசுகள் எடுக்கவில்லையென பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012-03-31 க்கு பின்னர் பட்டம்பெற்ற ஆயிரத்து 800 ற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான நியமனங்களை வழங்கும் வகையில் மத்திய மாகாண அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டதாரிகள் முன்வைத்துள்ளனர்.

அக் கோரிக்கைகளாக…

பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் போது பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும்.

வயதெல்லை 45 அதிகரிக்கப்பட வேண்டும்.

பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பம் கோரப்படுகையில் ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்காதவாறு சுற்றுநிருபம் அமைய வேண்டும்.

கோட்டா முறையில் நியமனங்கள் வழங்கப்படும் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.

இறுதியாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆசிரிய ஆளணி சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, முகாமைத்துவ சேவைத்திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டு கிழக்கு மாகாண ஆசிரிய வெற்றிடத்தை வெளியிட வேண்டும்.

அதற்கான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் கோரப்படும் போது மாற்றுத்திறனாளிகள் விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தராமல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருவதாக பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பட்டதாரிகளின் பிரச்சினைகளை பட்டதாரிகளின் பிரச்சினையாக மட்டும்பார்க்காமல் ஒரு சமூகப் பிரச்சினையாகக்கொண்டு மிக விரையில் தீர்வொன்றினை பெற்றுத்தர அனைவும் முன்வர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதுடன், போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்