வடமாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்

129 0

வடமாகாணத்தில் அப்பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும்  வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும்  கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில்  தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட உள்ளன.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அந்த அமைச்சின் கீழ் மீள்குடியேற்றப் பிரிவு, சமூக நீர்  திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்  நாள் ஒன்றுக்கு 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டுள்ளது என்று மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும் போது  அதிக  உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பு மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு  209 மில்லியன் ரூபாவாகும்.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பின் அமைச்சின் கீழ் செயற்படும் மீள்குடியேற்றப் பிரிவின்  இந்தத் திட்டத்தின்  சுமார் 60% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் காரணமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் நிறைவு காலதாமதமானது என்றும் அந்த பிரிவு குறிப்பிடுகிறது. விரைவில்  இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்தது.