பரம்பரை பரம்பரையாக நாங்கள் கடலட்டை தொழில் செய்தோம்:அன்னராசா

110 0

கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

காக்கைதீவில் அண்மையில் கடற்றொழில் அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட கடலட்டை பதனிடும் தொழிற்சாலை மற்றும் கடலட்டை பண்ணை தொடர்பாக முன்னெடுக்கப்பட போராட்டம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்துவிட்டு நாங்கள் கொண்டு வந்தோம் என சிலர் படம் காட்ட முயற்சிக்கின்றனர். கடலட்டை என்பது காலாதிகாலமாக உள்ள விடயம். அதற்குள் அரசியல் படம் காட்டுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.

கடலட்டை மூலம் கட்றறொழில் சமூகத்துக்குள் பிரச்சினை ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கனவே நான் கூறியிருந்தேன் அது நேற்று இடம்பெற்றுள்ளது.

நாங்கள் கடலட்டை பண்ணை வழங்குவதை மறுக்கவில்லை. முறையாக சட்டவிதிப்படி கடற்றொழிலாளிகளுக்கு வழங்குங்கள் என்பதே எமது நிலைப்பாடு.

இந்த போராட்டமல்ல எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது மக்களுக்காக என்றும் தொடர்ந்து குரல் கொடுப்போம். அனலைதீவுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் மேற்கொண்டபோது பருத்தித்தீவில் சட்டவிரோதமாக இருக்கும் பண்ணைகளை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதுபோன்ற சட்ட விரோத பண்ணைகளை தான் நாங்கள் இயன்றளவு எதிர்க்கின்றோம். பருத்தித் தீவில் இன்றளவும் சட்டவிரோதப் பண்ணைகள் காணப்படுகின்றது.

குறித்த பிரதேச கடற்றொழில் சங்கங்கள், பிரதேச செயலர் போன்றோர் சட்டவிரோதம் என கூறிய போதும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாத தருணத்தில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதரும் வேளையில் அடையாள போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்ய வேண்டிவரும்.”என கூறியுள்ளார்.