பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

232 0
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தனையடுத்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதோடு, மக்களும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்று முதல் தடவையாக தங்களின் வீடுகளுக்குச் சென்று துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த பிரதேசங்களில் இருந்து படையினரும் படிப்படியாக வெளியேறிவருகின்றனர். குறித்த பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட வேலிகள் அகற்றப்பட்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் திங்கள் கிழமை உத்தியோகபூர்வமாக படையினரால் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. பின்னர் பிரதேச செயலகம் ஊடாக உரிய மக்களிடம்கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல்வாதிகள் , அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட    நிலையில் அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்