ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணி சொத்து ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு சந்தமானது என கூறப்படும் காணியே இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் (29) இல் இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காணிக்காக மதிப்பீட்டுத் திணைக்களம் ஆகக்குறைந்தது 208 மில்லயன் ரூபாவை வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள உரிமையாளரும் இக்காணி தமது இல்லை என தெரிவித்துள்ள நிலையில், இந்த காணி ஏலத்தில் விடப்படவுள்ளது.
பூகொடை நீதவான் அண்மையில் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். குறித்த காணியானது 64 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்து, அதில் 125 மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளதாக பசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரின் உறவினரான திருக்குமார் நடேசனும் முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இக்காணியும் அதிலுள்ள வீடும் பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் இக்காணி அவருக்குரியதல்ல என மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த விடயம் பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

