உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இருமுனை போட்டி நிலவுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (டிச.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளோம்.
தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இருமுனை போட்டி நிலவுகிறது.
மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெறுமதி சேர் வரி உட்பட நேரடி வரி அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
நடுத்தர மக்கள் நேரடி வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது அரசாங்கத்தினால் மக்கள் மத்தியில் செல்ல முடியாது.
எதிர்வரும் மாதம் முதல் மின்விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டு தொடர்ச்சியான மின்விநியோக துண்டிப்பிற்கு செல்ல நேரிடும் என குறிப்பிடப்பட்டுகிறது,ஆகவே மக்கள் இருளில் இருக்கும் போது அரசாங்கம் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடியாது,இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் சென்றால் மக்கள் அடித்து விரட்டுவார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைக்கப் பெறும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. தற்போது அடுத்தமாதம் என குறிப்பிடப்படுகிறது.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அடுத்த மாதமும் கிடைப்பது சாத்தியமற்றது. ஆகவே இவ்வாறான காரணிகளினால் அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சமடைந்துள்ளது.

