திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)’ வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த தொடர் பயணத்தின் 55ஆவது நிகழ்வில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை (டிச. 22) சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்துக்கு சென்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் வேண்டுகோளின் பேரில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற சஜித், 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை (Dialysis Machine) வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜகத் விக்ரமசிங்கவிடம் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களான கபில கழுபஹன, சரத் லொரென்ஸுஹேவா, திருக்குமார், மாவட்ட முகாமையாளர்களான ஏ.எஸ்.எம். மஹரூப், பிரான்சிஸ் அந்தோணி சேகர், பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நெளபர், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாத்திஹ் கஸ்ஸாலி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், வைத்தியசாலை மருத்துவர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.