அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என குறிப்பிட முடியாது. நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது சுமத்தவும் முடியாது.
அரச நிறுவன தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிட முடியாது.பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் பல கட்டமாக பிரித்தல், ஒரு சேவை அடிப்படையில் செயற்படும் நிறுவனத்தை ஒன்றிணைத்தல், முகாமைத்துவ அதிகாரத்தை அரசாங்கத்திடம் பொறுப்பாக்கல், ஒழுங்குப்படுத்தலை தனியாருக்கு வழங்கல், முகாமைத்துவத்தை தனியாருக்கு வழங்கி ஏனைய சேவைகளை அரசாங்கம் முன்னெடுத்தல்,பங்கு அடிப்படையில் அல்லது முழுமையாக குத்தகை அடிப்படையில் வழங்கல்,அரச நிறுவனங்களின் 49 பங்குளை பிற தரப்புடன் ஒன்றிணைத்தல்,வெளிப்படை தன்மையுடன் நிறுவன கட்டமைப்பை நிர்வகித்தல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகஅரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.49 இற்கும் அதிகமான அரச நிறுவனங்களின் நட்டம் திறைச்சேரி ஊடாக முகாமைத்துவம் செய்யப்படுகிறது.
மறுசீரமைப்பு பட்டியலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் 2017 ஆம் ஆண்டு 311 பி;ல்லியன் ரூபா,2018ஆம் ஆண்டு 307 பில்லியன் ரூபா,2019 ஆம் ஆண்டு 295 பில்லியன் ரூபா,2020 ஆம் ஆண்டு 454 பில்லியன் ரூபா,367 பில்லியன் ரூபாவும் நட்டமடைந்துள்ளன.இந்த நட்டத்தை தொடர்ந்து நாட்டு மக்கள் மீது சுமத்த முடியாது.
பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள பின்னணியில் அறிவார்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.இதுவா அவர்கள் தாய் நாட்டுக்கு செய்யும் சேவை,பொருளாதார நெருக்கடி அவர்களை அந்த நிலைக்கு தள்ளியள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ளார்கள்.
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது வெளிப்படைத்தன்மை, மக்களுக்கான சேவை நலன்புரி சேவை உறுதிப்படுத்தல், தொழிலாளர்களின் தொழில் மற்றும் தொழில் உரிமை பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் பொறுப்படன் செயல்படும் என்றார்.

