மனித உரிமைகள் தினத்தில் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி

102 0

மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு தமக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனீற்றா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (07.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான நீதி வழங்கப்படாமை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, காணிகள் சுவீகரிப்பு என நீண்டு சென்று கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்படி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலே இப்பேரணி ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.

அதேபோன்று வடக்கிலே அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலிலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடையவுள்ளது.

இப்பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டுள்ள எமக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.