சீனி வரி மோசடி தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் – கபீர் ஹாசிம் கோரிக்கை

77 0

அரசாங்கத்துக்கு 16763 மில்லியன் ரூபாவை இல்லாமலாக்கிய சீனி வரி மோசடி தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என கோபா குழுவின் தலைவர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கோபா குழுவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிக்கையை திங்கட்கிழமை (டிச.05) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சீனி வரி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் 13 அவதானிப்பு இருந்தது. இந்த வரி மோசடி காரணமாக அரசாங்கத்துக்கு சுமார் 16,763 மில்லியன் வரி வருமானம் இல்லாமல் போயுள்ளது. அத்துடன் சீனி வரி 75 சத வீதத்தினால் குறைந்தாலும் சீனி விலை அதற்கு நிகராக குறையவில்லை. அதன் காரணமாக நுகர்வோருக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டது.

அத்துடன் இந்த வரி குறைப்பின் கீழ் சீனி இறக்குமதி 200வீதம் வரை அதிகரித்திருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தின் 13 அவதானிப்புகளை அடிப்படையாகக்கொண்டு குற்றவியல் விசாரணைப்பிரிவு ஊடாக உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு கணக்காய்வாளர் நாயகம் கோபா குழு ஊடாக அறிவித்திருந்தார்.

எனவே இது தொடர்பான விசாரணைக்கு தேவையான அனைத்து சாட்சி தகவல்களும் குழு ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன் விசாரணை அறிக்கையை பெற்றுக்கொண்டு, அந்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.