வடக்கில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடங்கள் சில முற்றுகை!

90 0

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குபட்ட உரும்பிராய் – விளாத்தியடி பகுதியில் இன்றையதினம் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 4 இலட்சத்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடாவுடன் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி காட்டுப்பகுதியில் இயங்கிவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி இடம் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வேலைத்திட்டத்தினை இலங்கை மதுவரித்திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை மற்றும் உற்பத்திகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் தலைமையில் வாகனேரிப்பகுதியில் உள்ள குளத்துமடு காடுகளில் நேற்று விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது மறைவான நிலையில் பாரியளவில் கசிப்பு உற்பத்திசெய்யும் இடம் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவு கோட்டாக்களும் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேநேரம் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஐந்து பேர் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐந்து பறல்கள் கோடா மீட்கப்பட்டதாகவும் ஒரு பறலில் 150,000மில்லி லீட்டர் அடிப்படையில் ஐந்து பரல்களிலும் 750,000 மில்லி லீட்டர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.