நாட்டின் தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் மக்களாணை தற்போதைய அரசாங்கத்திற்கு, விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. இலங்கை டெலிகொம் உட்பட அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) நிலையியல் கட்டளை 27 இன் 2 கீழ் விசேட பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசிய வளங்களை முழுமையாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தொடர்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் அந்த தீர்மானங்களை செயற்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய இலங்கை டெலிகொம் நிறுவனம் இலாபமடையும் நிறுவனமாக காணப்படும் நிலையில் அதனை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் போது நாட்டின் இறையாண்மை தேசிய பாதுகாப்பிற்கும்,பொது மக்களுக்கான நலன்புரி திட்டங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும்.
இலங்கை மின்சார சபை நட்டமடையும் அரச நிறுவனம் என்பதை அனைவரும் அறிவோம்.மின்சார சபையின் நட்டம் முகாமைத்துவம் செய்து இலாபமடையும் நிலைக்கு கொண்டு செல்லும் தேசிய கொள்கை திட்டம் ஏதும் இதுவரை வகுக்கப்படவில்லை.மக்கள் பிரதிநிகள் நாட்டின் அரசியலமைப்பு அல்ல.
நாட்டின் சுயாதீன தன்மை எவ்வாறு காணப்படும் என்பது நாட்டின் வலுசக்தி துறையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும்.
நாட்டின் வலுசக்தி துறையை ஒரு தரப்பினர் தன்வசப்படுத்திக் கொள்வது அரசியலமைப்பு முரணானது.வலுசக்தி துறைமை தனியார் மயப்படுத்தும் மக்களாணை தற்போதைய அரசாங்கத்திற்கு விசேடமாக ஜனாதிபதிக்கு கிடையாது.
வலுசக்தி துறை எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் கொள்கை ரீதியில் நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும் அதனை விடுத்து தேசிய வளங்களை விற்பது,தொடர்ந்து கடன் பெறுவது ஒரு தீர்வாக அமையாது.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதா , இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதா? இந்த கேள்விகளை தேசிய பிரச்சினையாக கருதி பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

