வலப்பனை- நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நில்தண்டாஹின்னா நகரில் ஏற்கனவே மதுபானசாலையொன்று உள்ள நிலையில், மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் இப்பகுதியில் சமூக நெருக்கடி – பிரச்சினைகள் உருவாகலாம் எனவும், இளைய சமுதாயம் சீரழிக்கப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த நகரத்துக்கு பல அத்தியாவசிய விடயங்கள் தேவைப்படும் நிலையில் எதற்காக மதுபானசாலை திறப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், அந்த அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



