விடுதலைப்புலிகளின் சயனட்,இலக்கத்தகடு உள்ளடங்கலாக மனித எச்சங்கள் மீட்பு

195 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த மாதம் 20 ஆம் திகதி அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று புதன்கிழமை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான், தடையவியல் பொலிஸார் ஆகியோராால் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள், விடுதலைப்புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.