சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்

85 0

சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸில் வாய்ப்பு கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர், பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது.

இதில் 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்தார். இதனால், அக்கட்சி கவுன்சிலர்கள் எண்ணிக்கை மீண்டும் 13 ஆக குறைந்தது. தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் காங்கிரஸ் சார்பில் மாநகராட்சி மன்ற கட்சித் தலைவர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மற்றும் திருச்சி மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேரில் 11 பேர் கலந்துகொண்டனர்.அவர்களில் அதிக கவுன்சிலர்கள் ஆதரவு பெற்ற எம்.எஸ்.திரவியம் மாநகராட்சி மன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.