யாழ்.பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத் துறைக்கு பேராசிரியர்கள் நியமனம்

88 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று(26.11.2022) ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலாநிதி ஏ.ரமணன், கலாநிதி எம். சியாமளன் ஆகியோரின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அவற்றின் அடிப்படையில், கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.சியாமளன் ஆகியோர் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத் துறை தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் முதன் முதலாக கணினி விஞ்ஞானத் துறையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.