தீயாகி வானில் ஒளிரான வீரர்கள்! -அகரப்பாவலன்.

188 0

தீயாகி வானில் ஒளிரான வீரர்கள்!
———————————————————-

விமான நிலையமொன்றில் நிற்கின்றேன்
வான்பறவைகள்
எழுவதும் , இறங்குவதுமாக
விழித்திரையில் பதிவாகிறது…
மூளையின் கதவுகள் திறக்கின்றன..
அறிந்தவை,உணர்ந்தவை விரிகின்றன..

இளநீல சீருடை
உளம் முழுதும் உணர்வலை
விடை கூறும் பெருமிதம்
புன்னகையில் தீயலை

வானோடும் சேய்ப்பறவைகளை
கையசைத்து வழியனுப்பும்
தாய்ப்பறவை…

தமிழர் வரலாற்றில்
வான்படையின் சரிதம்
பதிவாகி நிமிர்ந்த நேரம்…
நம்பிக்கையின் ஆணிவேர்
ஆழவேரூன்றி ஆழழ்கிறது…

தமிழீழ வான்பறவை
பொழிந்த தீக்குண்டுகள்
சிங்களத்தின் ஆழ்மனதில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நேரம்…

கொழும்புத் தாக்குதலுக்காய்
இலக்குடன் எழுகின்றது
ஈழப்பறவை…

இலக்கு தீப்பிழம்பாகிறது..
தமிழர் சரிதையில்
வான்படை வீரர்கள்
தீயாகி வானில்
சுடராகி ஒளிர்ந்த காட்சி
உலகின் இமைகளை நிமிர்த்துகிறது…

தமிழரின் வரலாற்றில்
வான்படையின் தற்கொடையாய்
உயிரீந்த மாவீரராய்
ரூபனும்,சிரித்திரனும்
பதிவாகி ஓளிர்கின்றனர்.

உயிரீகம் தந்து தமிழீழம் மலர
தீயாகி ஒளிர்ந்தவர் தாள் பணிவோம்.

-அகரப்பாவலன்-