மாவீரர் நாள்- 2022-புலித்தோல் போர்த்திய நரிகள் நாசுக்காக குழப்ப வேலைகளை செய்கின்றனர்!

781 0

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழீழ தேசத்தில் மாவீரர் நாள் பல இன்னல்கள் மத்தியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. சிங்கள பௌத்த ஏகாதிபத்திய அரசாங்கத்தால் மாவீரர் வார நிகழ்வுகளை தடுத்தல், மற்றும் மக்களை அச்சுறுத்தல், மிரட்டுதல்,கைது செய்தல் போன்ற வன்கொடுமைகளை மேற்கொள்வதால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்கள் ஒன்று கூடி மாவீரர் தினத்தை அனுட்டிப்பது வழமை. ஆனால் இம்முறை புலம்பெயர் உறவுகளின் பாரிய நிதி உதவியினால் தமிழீழ தேசம் எங்கும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டுகின்றன. மாவீரர் நாளுக்காக புதுபொலிவு பெறுகின்றன .

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.அதே போன்று புலத்தில் மட்டுமல்ல தமிழீழத்திலும் மாவீரர் பெற்றோர் உரிய முறையில் கௌரவிக்கப்படுகின்றார்கள்.

சிறிலங்காவின் அரசியல் தளம் சிங்கள மக்களாலேயே ஆட்டங்காண வைக்கப்பட்டுள்ள நிலையில் எமது மாவீரர் தின நிகழ்வுகளை குழப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் என்ன செய்வது என குழம்பி போய்யுள்ளது . இது எமக்கான ஒரு சாதகமான களச்சூழலாக உள்ளது. ஆனால் புலித்தோல் போர்த்திய நரிகள் நாசுக்காக குழப்ப வேலைகளை செய்கின்றனர்.

வேடம் அணிந்த வேடதாரி மக்களுக்குள் ஊடுருவி நயப்பு வார்த்தை ஜாலங்களால் மக்களுக்குள் ஆழமாக பயணிக்க முனைகின்றார்.

‘ தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும் ‘ என தியாகி லெப். கேணல் திலீபன் அவர்கள் கூறிச்சென்ற வார்த்தையே இம்முறை மாவீரர் தினத்திற்கான எமது கோசமாமாக அமையட்டும்.