யாழ். திருநெல்வேலியிலுள்ள ஒட்டிசம் பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட மாட்டாது

238 0

யாழ். திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள ஒட்டிச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையுடன் கூடிய பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளதாக அங்கு சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த சிகிச்சை நிலையம் வட மாகாண சுகாதார அமைச்சின் ஆளுகைக்கு உட்பட்டதாக காணப்படுகின்ற நிலையில், அதனை கடந்த காலங்களில் நிர்வகித்த உயர் அதிகாரிகள் முறையற்ற நிர்வாக, நிதி விடயங்களை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் வட மாகாண பிரதம செயலாளர், குழுவொன்றை அமைத்து, அதனை சரியான முறையில் நடத்திச் செல்வதற்குரிய பொறி முறையொன்றை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதனையறிந்த சிலர் தமது பணிக் காலத்தில் மேற்கொண்ட முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் அம்பலத்துக்கு வந்துவிடுமென அஞ்சி, இப்பயிற்சி நிலையம் மூடப்படப்போவதாக கதை பரப்பியுள்ளனர் என  கூறப்படுகிறது.

இவ்விடயம் வட மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆளுநர் குறித்த பயிற்சி நிலைய விவகாரம் தொடர்பில் தான் அவதானத்துடன் இருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் பயிற்சி நிலையத்தை மூட இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட மாகாணத்தை மையப்படுத்தி இந்த ஒட்டிசம் பயிற்சி நிலையத்தை நிரந்தர கட்டடத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.