காட்பாடியில் நளினி தங்கியுள்ள வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

143 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் கடந்த 10 மாதமாக பரோலில் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து காட்பாடி பிரம்மபுரத்தில் நளினி தங்கி உள்ள வீட்டின் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பரோலில் தங்கி உள்ள நளினிக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது விடுதலை செய்யப்பட்டதால் அவரை சந்திக்க பல்வேறு தரப்பினர் வருகை தர வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதினர். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.