போராட்டத்தை குழப்ப விமானப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் சதி மக்கள் விசனம்

241 0

தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும்  இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

இதுதொடர்பில்  அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு   மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி பதினேழு நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும்  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் எமது  போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதனைவிட போரட்டத்தில் ஈடுபடும் சிலரை மது பாவனைக்கு அடிமையாக்கி அவர்களூடாக போராட்டத்தை குழப்ப சதித்திட்டம் தீட்டிவருவதாகவும்  அவ்வாறான சம்பவங்கள் சில இடம்பெற்றதாகவும் எத்தடை வந்தாலும் தாம் கணிக்குள் செல்லும்வரை போராட்டம் நிறுத்தப்படாது எனவும் தமக்கு மக்கள் அச்சமின்றி பூரண ஆதரவு வழங்குமாறும் கூறுகின்றனர்

முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகிறது

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் இன்றும் பலர் தமது ஆதரவுகளை வழங்கினர்.