மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் முனைத்தீவு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீட்டிலிருந்து வெளியே வந்தவரை தாக்கியுள்ளது.
முனைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 69 வயதுடைய காளிக்குட்டி சங்கரப்பிள்ளை என்பரே உயிரிழந்துள்ளார்.
இதன்போது காட்டு யானை வீட்டினையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் காட்டு யானையின் அச்சுறுத்தல் காரணமாக இன்று (17) அதிகாலை அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பகுதியின் காட்டுப் பகுதியை அண்டிய பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த யானைகள் இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

