தீப்பிடித்து எரிந்த பஸ் : குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழப்பு : பாகிஸ்தானில் சம்பவம் !

170 0

பாகிஸ்தானில் பஸ்ஸொன்று தீப்பிடித்து எரிந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

 

பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நேற்று நள்ளிரவு பஸ் ஒன்று 60 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில், குறித்த பஸ்ஸில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் பஸ் வண்டியை சாரதி நிறுத்தியுள்ளார். ஆனால் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் சிலர் பஸ்ஸின்  கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து தப்பினர்.

ஆனால் பஸ்ஸுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பஸ்ஸில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தது.

தீப்பிடித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள்  பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் ஆவார். பாகிஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ள பாதிப்பு குறைந்ததால் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்ஸில் பயணித்த போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.