ரஷியா ஒரு பயங்கரவாத நாடு என நிரூபித்துள்ளது- உக்ரைன் கடும் விமர்சனம்

194 0

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கிவ்வில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷியாவின் கிரீமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் உக்ரைன் தலைநகரில் ஆவேச தாக்குதலை நடத்தியது.

கிவ் நகரை நோக்கி ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 14 பேர் பலியானார் கள். 97 பேர் காயம் அடைந்தனர். கிவ் நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஐ.நா. சபை அவசரமாக கூடியது. போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் உக்ரைன் தூதர் செர்ஜி பேசும்போது, ரஷியாவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறும்போது, “வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அல்லது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நோக்கி தாக்குதல் நடத்துவதன் மூலம் ரஷியா, தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதை வலுவான வழிகளில் தடுக்கப்பட வேண்டும்” என்றார்.