பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது

95 0

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள், அது தொடர்பிலான பெற்றோரின் முறைப்பாடுகள் மற்றும் அங்கு இடம் பெற்று வரும் சம்பவங்கள்  தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பேராதனை சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.   நாட்டில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர்.

அதில் ஒரு சிலரது மனித உரிமை பற்றி கவனம் மேற்கொள்வதா அல்லது 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பில் கவனம் எடுப்பதா என்பது தொடர்பில் கற்றவர்களும் நன்கு உணர்வர்.

அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களுக்காகவும் ஒருசிலர் செயற்பட்டு வருகின்றனர்.அங்கு அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

பேராதனை  பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் எனக்கு பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து 600க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

மனித உரிமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் குறுகிய நோக்கங்களுக்காக செயல்படுபவர்கள் மற்றும் வன்முறைகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.