இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்துச் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக செயற்பாடுகளிலும் அதன் யாப்பிலும் நியாயமற்ற வகையில் விளையாட்டுத்துறை அமைச்சு தலையிட்டால், இலங்கைக்கு தடை விதிப்பது குறித்து உலக கால்பந்தாட்டத்தை ஆளுகை செய்யும் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் (FIFA) ஆலோசிக்கக்கூடும். இதன் காரணமாக இந்தத் தடையிலிருந்து இலங்கை கால்பந்தாட்டத்தையும் பொது நலன்களையும் பாதுகாக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு ஒன்றை
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர், செயலாளர் நாயகம் ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மாஅதிபர் உப்பாலி ஹேவகே ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இதனை அடுத்தே இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற ம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த பிரச்சினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கையும் கால்பந்தாட்ட நிர்வாகமும் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவதுடன் பீபாவின் தடையை இலங்கை நிச்சயமாக எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.
இந்த மேன்முறையீடு எதிர்வரும் 4ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பீபாவினால் இந்தியாவுக்கு அண்மையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை சுமுக நிலைக்கு கொண்டுவருவதற்காக பீபாவின் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட இணங்குவதாக ஒரு பண்பாளருக்கே உரிய பாணியில் உத்தரவாதம் அளித்தார்.
அதனை அடுத்து இந்தியா மீதான தடையை பீபா நீக்கியது.

