பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு

92 0

கம்பளை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் உள்ள இடத்தில் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்ட முகநூல் விருந்தொன்றை மத்திய மாகாண மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குழு சுற்றிவளைத்துள்ளது.

இந்த விருந்தில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட இளைஞர்களில், 50 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் காணப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த விருந்தில் 14-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் பங்கேற்றதாக தெரிவித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், அந்த மாணவர்களை கடுமையாக எச்சரித்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் உபுல் செனவிரத்னவுக்கு கிடைத்த தகவலின்படி, ஃபேஸ்புக் குழுவுடன் மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் சூட்சமமாக இணைத்து தகவல்களைப் பெற்றுள்ளார்.

முகநூல் விருந்து நேற்று (24) பிற்பகல் 02:00 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இரு இளம் மதுவரி அதிகாரிகளும் இரண்டு பெண் அதிகாரிகளும் காதலர்கள் போல் நடித்து விருந்தில் கலந்து கொண்டு வியூக ரீதியாக சோதனை நடத்தினர்.

மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் உபுல் செனவிரத்னவின் பணிப்புரையின் பேரில், கம்பளை, ஹட்டன் மற்றும் நுவரெலியா மதுவரி நிலையங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பின் போது, ​​பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் பல்வேறு போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தி, மிகவும் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த 12 பேரை இன்று (25) கம்பளை மேலதிக நீதவான் அஜித் உடுகம முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.